புனே இன்போசிஸ் அலுவலகத்தில் கேரள இளம்பெண் கொலை

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலையான பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது புனே இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவை சேர்ந்த இளம்பெண் ரசிலா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை அந்நிறுவனத்தில் பணியாற்றிய காவலர் ஒருவரே செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 25 வயது ரசிலா ராஜூ என்பவர் புனேவில் உள்ள ஹிஞ்சேவாடி என்ற பகுதியில் இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும் முக்கிய பணி ஒன்றை முடிப்பதற்காக இவர் தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் இன்போசிஸ் அலுவலகத்தின் 9வது மாடியில் உள்ள கான்பரன்ஸ் அறையில் ரசிலா கம்ப்யூட்டர் வயரினால் கழுத்து அறுபட்ட நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனடியாக விரைந்து வந்த காவல்துறை அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி பாபென் சைல்சியா என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கள் நிறுவனத்தின் ஊழியர் ரசிலா கொலை செய்யப்பட்டிருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள இன்போசிஸ் ஊழியர்கள், அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.